முன்னாள் நீதிபதி உள்ளிட்ட இருவருக்கு 16 வருட கடூழிய சிறை


3 இலட்சம்  ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இருவருக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம், 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவினை இன்று (20) பிறப்பித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கொன்றில் பிரதிவாதிக்கு சார்பாக  தீர்ப்பை வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு  குற்றச்சாட்டுக்களின் கீழ், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.