முச்சக்கரவண்டி விபத்து


(க.கிஷாந்தன்)
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் 12.02.2020 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயம்பட்டு பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பண்டாரவளை – மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.