எம்.எஃப். ஹுசைன் என்ன நினைத்து இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார்?





"எதையுமே அறியாதவன் என்பதை அறிந்து கொண்டேன். அதையும் ஏதோ ஒரு வயதில்தான் அறிந்துகொண்டேன்"


பல ஆண்டுகளுக்கு முன்பு, பிபிசியுடன் பேசும்போது, ​​மக்பூல் ஃபிதா ஹுசைன், இந்த கவிதை வரிகளை சொல்லியிருந்தார். உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், இது அவரது வாழ்வின் தத்துவமும் கூட.


'கடவுள் தனித்தன்மையில் வாசம் செய்கிறார்' என்ற பழைய யூத பழமொழி ஒன்று உள்ளது.


இது கடவுளைப் பொருத்தவரை உண்மையோ இல்லையோ, ஹுசைனின் கலையை பொருத்தவரை இது உண்மைதான்.


ஹுசைனின் முழு வாழ்க்கையையும் நீங்கள் பார்த்தால், உடனடியாக நம் கவனத்தை ஈர்ப்பது மிகப் பெரிய உண்மைகள் அல்ல, ஆனால் சிறிய அற்பமான மற்றும் எளிமையான விஷயங்கள்தான். இவற்றை வரலாறு ஒதுக்கி வைத்துள்ளது.


ஆனால் ஹுசைன், ஒரு பள்ளி மாணவர் போல அவற்றை தனது சட்டைப்பையில் நிரப்பி கொண்டு சென்று விடுகிறார்.


ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நோபோகாஃப் ஒருமுற , சிறந்த கலைஞர்கரிடம் இருக்கும் அம்சங்களை விவரித்தார்.


"வீட்டின் ஒன்பதாவது மாடியில் இருந்து திடீரென விழும்போது, இரண்டாவது மாடியில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகையைப் பார்த்து, 'ஏய், அதில் எழுத்துப்பிழை உள்ளது ' என்று சொல்பவர்களைப் போன்றவர்கள் தான் கலைஞர்கள்" என்கிறார் அவர்.


எம்.எஃப். ஹூசைன்

பட மூலாதாரம்,EDMOND TERAKOPIAN

இவர்தான் மக்பூல் ஃபிதா ஹூசைன்.


' ஓ கடவுளே! எம்.எஃப். ஹூசைன் '


காம்னா பிரசாத் ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் உருது மொழியின் சிறந்த வல்லுனர். ஹுசைனை மிக நெருக்கமாக அறிந்து கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.


நீங்களும் ஹுசைனும் முதலில் எங்கே சந்தித்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.


'சாலையில்', என்று அவர் பதில் சொன்னார்.


காம்னா மேலும் கூறினார் - பாரதி நகரின் குறுக்கு வழியில், ஒரு நபர் ஒரு கறுப்பு காரை பின்னால் இருந்து தள்ளுவதை நான் கண்டேன். அவர் தனது காரில் தனியாக இருந்தார். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. அவருக்கு உதவி தேவைப்படலாம் என்று நினைத்து என் காரை அவருக்கு அருகில் நிறுத்தினேன்.


அவர் உடனே வந்து என் காரில் என் அருகில் அமர்ந்து விட்டார். நான் அவரை பார்த்தபோது, ​​ 'ஓ கடவுளே. நீங்கள் எம்.எஃப்.ஹுசைனா, ' என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்தன.


அவர் ஆமாம் என்று சொன்னார். அதன் பிறகு அவரை விமான நிலையத்தில் நான் சந்தித்தேன். அதன் பின்னர் அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.


எம்.எஃப். ஹூசைன்

பட மூலாதாரம்,CHRIS JACKSON

நான் உருது கவிதைகளிலும், அது தொடர்பான கலாசாரங்களிலும் தேர்ந்தவள் என்பதை அவர் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். அவருக்கும் கவிதைகளை படிப்பது மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு விஷயத்திற்கும் அழகான கவிதை வரிகளை அவர் சொல்வார். உருது மொழியில் புலமை பெற்றவர்களை அவர் எப்போதும் நினைவு கூர்ந்தார்.


அவரது காலத்தில் ஹுசைனின் ஓவியங்கள்தான் அனைத்தையும் விட விலையுயர்ந்ததாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரது பெருந்தன்மை மிகவும் பிரபலமானது.


ஈரமான வரைதிரையில் 'ஓடும் குதிரை'

சுனிதா குமார் ஒரு பிரபல ஓவியர் மற்றும் ஒரு சமயத்தில் அன்னை தெரசாவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவரது கணவர் நரேஷ்குமார், இந்திய டேவிஸ் கோப்பை அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.


சுனிதா கூறுகிறார்- "டெல்லியில் நடந்த ஒரு விருந்தில் நான் முதல் முறையாக ஹுசைனை சந்தித்தேன். அடுத்த நாள் நடைபெறவிருக்கும் தேசிய டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியைக் காணவருமாறு அவரை அழைத்தேன். மார்க் ஆண்டர்சன் வெற்றி பெறுவார் என்று ஹுசைன் பந்தயம் கட்டினார்."


"விஜய் அமிர்தராஜ் வெல்வார் என்று நான் பந்தயம் வைத்தேன். பந்தயத்தில் தோற்றவர் தன் கையால் வரைந்த ஓவியத்தை வெற்றிபெறுபவருக்கு கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் போட்டியில் வென்றார். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஹுசைனிடம் கேட்க நான் துணியவில்லை."


நாங்கள் ஓபராய் ஹோட்டலில் தங்கியிருந்தோம். நாங்கள் வெளியே செல்லும்போது ,​​ 'ஹூசைன் அவர்கள், உங்களுக்காக ஒரு பாக்கெட்டை விட்டுச்சென்றுள்ளார்' என்று வரவேற்பாளர் கூறினார். போட்டியைக் காண அழைத்தமைக்கு நன்றி கூறும் ஒரு குறிப்பு அதில் இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.


எம்.எஃப். ஹூசைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நான் பாக்கெட்டைத் திறந்தபோது, ​​ஹுசைனின் கைவண்ணத்தில் உருவான ஒரு குதிரையின் ஓவியம் அதில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.


வண்ணப்பூச்சு இன்னும் ஈரமாக இருந்தது. ஏனெனில் எண்ணெய் வண்ணப்பூச்சு மிக விரைவாக உலராது. ஹுசைன் ஒரே இரவில் அந்த ஓவியத்தை வரைந்து அதை என்னிடம் வழங்கினார், " என்று சுனிதா மேலும் கூறினார்.


பிரபல கலை விமர்சகர் பிரயாக் சுக்லாவும் , ஹுசைனுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறார்.


எண்பதுகளில் போபாலில் பாரத் பவன் கட்டப்பட்டபோது, ​​அதில் ஹுசைனின் ஓவியங்களும் வைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக பிரயாக் கூறுகிறார்.


ஷாஜகானின் மகள் ஜஹான் ஆரா: உலகின் 'செல்வந்த' இளவரசி ஆன கதை

ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?

"சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், ஹுசைன் தனது சில ஓவியங்களை பாரத் பவனுக்கு ஆறு மாதங்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டார். ஹுசைனிடமிருந்து ஓவியங்களை பெற்று அதை போபாலுக்கு அனுப்பும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.


"ஹுசைன் அவர்கள் அங்குவரும்போது எனக்கு விவரம் தெரிவிக்கும்படி அவரது மகன் ஷம்ஷாத்திடம் நான் சொன்னேன். ஷம்ஷாத்தின் தொலைபேசி அழைப்பு வந்தவுடன் நான் அங்கு சென்றேன். எனது வருகைக்கான காரணத்தை அவர் கேட்டார். நான் அவரிடம் காரணத்தை சொன்னபோது, ​​ஓவியங்களை எடுத்துச்செல்லுமாறு நான் ஏற்கனவே சொன்னேன். நீங்கள் ஏன் அதை எடுத்துச்செல்லவில்லை? என்று ஹுசைன் என்னிடம் கேட்டார்."


எம்.எஃப். ஹூசைன்

பட மூலாதாரம்,CHRIS JACKSON

"இந்த ஓவியங்களை உங்கள் முன்னிலையில் கொண்டு செல்ல விரும்புகிறேன், கூடவே இந்த ஓவியங்கள் எனக்கு கிடைத்துள்ளன என்று உங்களுக்கு எழுதிக்கொடுக்கவும் விரும்புகிறேன் என்று நான் சொன்னேன்."


"எழுதித்தர தேவையில்லை என்று ஹுசைன் கூறினார். இந்த ஓவியங்கள் பாரத் பவனுக்குப் போவது எனக்குப் போதுமானது. அவற்றை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்று சொல்லுங்கள்? என்று அவர் கேட்டார். அந்த நாட்களில் ஈரோஸ் திரையரங்குக்கு முன்னால் ஒரு சில டெம்போக்கள் நிறுத்தி வைக்கப்படிருக்கும். நேரத்தை வீணாக்காமல் ஒரு டெம்போவைக் கொண்டு வந்து ஓவியங்களை அவற்றில் வைத்து, பண்டாரா ரோடில் இருந்த கரந்த் அவர்களின் வீட்டிற்கு கொண்டுசென்றேன்."


நான் ஏன் காலணிகள் அணிய வேண்டும்?

ஹுசைன் 1963 முதல் காலணிகள் அணிவதை நிறுத்திவிட்டார். ஒரு முறை அவர் பிபிசியுடன் பேசும் போது, இதற்கு பின்னால் உள்ள கதையை பகிர்ந்து கொண்டார்.


அவர் சொன்னார், "முக்திபோத், ஹிந்தியில் மிகவும் பிரபலமான கவிஞராக இருந்தார். அவர் என் நண்பர். நான் அவரின் உருவப்படத்தையும் வரைந்துள்ளேன். அவர் காலமானபோது ​​ அவரது உடலுடன் தகனத்திற்கு நான் சென்றேன். அதே நேரத்தில் எனது செருப்புகளை நான் கழற்றினேன். நிலத்தின் வெப்பத்தை நான் உணர விரும்பினேன். என் மனதில் இன்னொரு எண்ணம் தோன்றியது - அது கர்பலாவில் (ஷியாக்களின் புனிதத்தலம்) இருந்து வந்தது. இதைப் பற்றிய மற்றொரு கதை இருக்கிறது. எனக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். என் கால்கள் என் தாயைப் போலவே இருப்பதாக என் தந்தை சொல்வார். ஆகவே நான் ஏன் அந்த காலில் காலணிகள் அணிய வேண்டும் என்று எண்ணினேன்."


தனது மனைவியுடன் ஹுசைன்

பட மூலாதாரம்,OTHERS

படக்குறிப்பு,

தனது மனைவியுடன் ஹுசைன்


ஒருவகையான சிறுபிள்ளத்தனம்

ஹுசைன் துறவி போன்ற சுபாவம் கொண்டவர். அவரை விசித்திரமானவர் என்று அழைக்க முடியாது, ஆனால் நிச்சயமாக அவரது இயல்பில் ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் இருந்தது.


"அவரிடம் கவலையின்றி ஊர்சுற்றித்திரியும் குணமும் இருந்தது. டெல்லிக்கு போவதற்காக வீட்டிலிருந்து விமானநிலையம் சென்றபிறகு கல்கத்தாவுக்கு டிக்கெட் வாங்குவது அவருக்கு பெரிய விஷயமல்ல. அவருக்கு குழந்தை போன்ற ஆர்வமும் இருந்தது. அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆசை அவர் மனதில் இருந்தது," என்று காம்னா பிரசாத் கூறுகிறார்.


விமான நிலையத்திற்குச் செல்வதற்காக அவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றபின், அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வருவது பலமுறை நடந்திருப்பதாக சுனிதா குமார் கூறுகிறார்.


உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்

 

ஒருமுறை விமான நிலையத்திற்குச் செல்லும்போது, ​​அவர் காரை நிறுத்திவிட்டு, நான் இங்குள்ள மைதானத்தில் தூங்க விரும்புகிறேன் என்று டிரைவரிடம் சொன்னார். அவர் தன் பையை வெளியே எடுத்து அதன் மேல் தலையை வைத்து தூங்கிவிட்டார். என் டிரைவர் என்னை அழைத்து, மெர்சிடிஸ் வண்டி ஒரு பக்கத்தில் நிற்கிறது, மறுபுறம் ஹுசைன் திறந்த வெளியில் தூங்குகிறார் என்று கூறினார்.


இதேபோன்ற ஒரு சுவாரசியமான சம்பவம் எஸ்.கே. மிஸ்ராவுடனும் நடந்தது.


மிஸ்ரா, பிரதமர் சந்திரசேகரின் முதன்மை செயலராக இருந்தார். அவர் இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்த நாட்களில் நடந்த ஒரு விஷயம் இது.


அவர் சைப்ரஸில் ஒரு ஹோட்டலைத் திறந்தார். அங்கு அவர் ஹுசைனின் ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து, குடியரசுத்தலைவரை முக்கிய விருந்தினராக அழைத்தார்.


முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?

பார்வை போன பின்பும் ஓவிய நூல் வெளியிடும் மதுரை கலைஞர் மனோகர் தேவதாஸ்

"கண்காட்சியின் நாள் வந்துவிட்டது, ஹுசைன் எங்கும் காணப்படவில்லை. திடீரென்று அவர் மாலையில் வரப்போவது தெரியவந்தது. நான் விமான நிலையத்தை அடைந்தபோது, ​​ஹுசைன் ஓவியங்கள் இல்லாமல் வருவதைக் கண்டேன். ஓவியங்கள் எங்கே என்று கேட்டதற்கு ஹுசைன், அடுத்த விமானத்தில் வருவதாகக் கூறினார்.


இதுதான் இன்றைய கடைசி விமானம் என்று நான் சொன்னேன். இரவு உணவுக்கு செல்லலாம் என்று ஹுசைன் சொன்னார். நான் அவருடன் சாப்பிட மறுத்துவிட்டேன். நான் கோபத்தில் இருந்தேன். நீங்கள் ஓவியங்கள் இல்லாமல் வருவதாக முன்னரே சொல்லியிருந்தால், ஹுசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சில பொய்க்காரணங்களைச் சொல்லியிருப்பேன். இப்போது நான் குடியரசுத்தலைவரை எப்படி எதிர்கொள்வது," என்று கேட்டதாக எஸ்.கே. மிஸ்ரா நினைவு கூர்ந்தார்,


"அடுத்த நாள், ஹுசைன் மீண்டும் என் அறைக்கு வந்தார். ஓவிய கண்காட்சி நடைபெறவிருக்கும் மண்டபத்திற்கு செல்வோம் என்று சொன்னார். நீங்கள் ஏன் என் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று நான் சொன்னேன். இருப்பினும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க நான் அங்கு சென்றேன். ஹுசைனின் பதிமூன்று ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதை நான் பார்த்தேன். அவற்றின் வண்ணங்கள் மிகவும் புதியவை. அவை ஏறகுறைய சொட்டிக் கொண்டிருந்தன என்று சொல்லலாம். ஹுசைன் இரவு முழுவதும் கண்விழித்து அந்த ஓவியங்களை எனக்காக உருவாக்கினார்."


ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் ஜக்கி மியான் என்பவர் ஒரு காலத்தில் தேநீர் கடை வைத்திருந்தார்.


எம்.எஃப். ஹூசைன்

பட மூலாதாரம்,OTHERS

தினமும் காலையில் ஜக்கி மியான் பாலில் இருந்து பாலாடையை எடுத்து, ஒரு தட்டில் தனியாக வைத்திருப்பார். பாலாடையை மிகவும் விரும்பும் ஹுசைன் எந்த நேரத்தில் அங்கு வருவார் என்று யாராலும் சொல்லமுடியாது.


தனித்துவமான உணவிடங்கள் , குழந்தை பருவத்திலிருந்தே அவரை ஈர்த்தன. மண் சட்டியில் சூடான பால் ஊற்றப்படும் போது வரும் வாசனையை அனுபவிப்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.


"நாங்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள். சட் பூஜை எங்கள் பகுதியில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பூஜையின் போது, மாவு, நெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தி டெக்குவா என்ற தின்பண்டத்தை செய்வோம். அவர் அதை மிகவும் நேசித்தார். அது வேண்டும் என்று அவர் எப்போதுமே கேட்பார். அவர் அதன் பெயரை மறந்துவிடுவார். ஆனால் 'எனக்கு பிஹாரி டோனட் ' கொடு என்று சொல்வார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து தேநீர் தயாரித்து தா என்று சொல்வார். பின்னர் அவரது வீட்டிற்கு போன் செய்து, இரவு ரொட்டி மீதமுள்ளதா என்று கேட்பார். பின்பு அந்த ரொட்டியை தேநீரில் நனைத்து சாப்பிடுவார், "என்று காம்னா பிரசாத் குறிப்பிட்டார்.


ராம் மனோகர் லோஹியாவும் ஹுசைனின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது மிகச் சிலருக்கே தெரியும்.


லோஹியா முகலாய உணவை நேசித்ததால் அவரை ஜம்மா மசூதிக்கு அருகிலுள்ள கரீம் ஹோட்டலுக்கு ஹுசைன் அழைத்துச் சென்றார். அங்கு லோஹியா அவரிடம், "நீங்கள் பிர்லா மற்றும் டாடாவின் வரவேற்பு அறையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓவியங்களிலிருந்து வெளியே வாருங்கள். ராமாயணத்தை வரையுங்கள்" என்றார்.


எம்.எஃப். ஹூசைன்

லோஹியாவின் இந்த வார்த்தைகள் ஒரு அம்பு போல் ஹுசைனை துளைத்தன, அது பல ஆண்டுகளுக்கு நீடித்தது..


லோஹியாவின் மரணத்திற்குப் பிறகு, பத்ரி விஷாலின் மோதி பவனை, ராமாயணத்தின் சுமார் நூற்று ஐம்பது ஓவியங்களால் அவர் நிரப்பினார்.


2005 ஆம் ஆண்டில், இந்து அடிப்படைவாதிகள் அவரது ஓவிய கண்காட்சியில் நுழைந்து சேதம் ஏற்படுத்தினர்.


அவர்களது அச்சுறுத்தல்கள் காரணமாக அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். பிறகு அவர் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை.


"அவர் என்ன நினைத்து இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தார்?" என்று ஒருமுறை பிபிசி அவரிடம் கேள்வி கேட்டது.


" அஜந்தா மற்றும் மகாபலிபுரம் கோவில்களில் இதற்கான பதில் உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை படியுங்கள். கலைக்கு மட்டுமே நான் பொறுப்பு. கலை உலகளாவியது. நடராஜின் உருவம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்குமானது. மகாபாரதம் என்பது புனிதர்கள் மற்றும் துறவிகளுக்காக மட்டும் எழுதப்படவில்லை. இது முழு உலகத்திற்கும் சொந்தமானது," என்று அவர் பதில் அளித்தார்.