சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு - மூடவும் உத்தரவு



வி.சுகிர்தகுமார்  


அம்பாறை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் அம்பாரை மாவட்ட  விவசாய திணைக்கள அதிகாரிகளினால் நேற்று மாலை (16)சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் விற்பனை நிலையங்களை மூடுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.


அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளரும் பீடைகொல்லி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான  எம்.எப்.ஏ.ஸனீர் தலைமையிலான குழுவினரே இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் விற்பனை நிலையங்களையும் மூடினர்.

இச்சுற்றிவளைப்பில் பாடவிதான உத்தியோகத்தர்களான ஏ.ஜெய்லாப்தீன், ஏ.ஐ.ஏ.பிரோஸ், அட்டாளைச்சேனை நிலைய பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ.முபாறக் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

பெரும்போகச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அனுமதிப்பத்திரமின்றிய சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதேநேரம் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையின் வீட்டுத்தோட்ட நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர் சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் அம்பாரை மாவட்டத்தில் இயங்குவதாகவும் அவர்களுக்கெதிரான நடவடிக்கை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று மாலை தொடக்கம் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டன.

மேலும் எதிர்வரும் காலத்தில் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படும் பட்சத்தில் 1980ஆம் ஆண்டு 33ஆம் இலக்க பீடைகொல்லி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1994ஆம் ஆண்டு 06ஆம் இலக்க பீடைநாசினிகள் திருத்தச்சட்டம், 2011ஆம் ஆண்டு 31ஆம் இலக்க பீடைகொல்லி திருத்தச்சட்டம் ஆகியவற்றிற்கு அமைவாக வழக்கு தொடரப்படும் என அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர் கூறினார்.

மேலும் விவசாய விற்பனை நிலையமொன்றை நடாத்தி செல்லும்போது ஒவ்வொருவரும் முறையான பயிற்சி சான்றிதழுடன் அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.