வடிச்சலாறு பகுதியில் மீன் பிடித்தவர் சடலமாக மீட்பு


 


(kinniyaToday)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு களப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55 வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது தம்பலகாமம்-வடிச்சலாறு களப்பு பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீட்டுக்கு வரவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன நபரின் உறவினர்கள் குறித்த கலப்பு பகுதியில் தேடுதல் நடாத்தியபோது முதலை கடித்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.