சுற்று நிருபங்களை கல்வி அதிகாரிகள் பின்பற்றுவதில்லை



 (க.கிஷாந்தன்)

கல்வி திணைக்களங்களிலிருந்தும், சுகாதார அமைச்சின் ஊடாகவும் அனுப்பப்படுகின்ற சுற்று நிருபங்களை கல்வி அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

தலவாக்கலை பகுதியில் 15.12.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாலசேகரம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மூன்றாம் தவணைக்காக பாடசலைகளை பாதுகாப்பான முறையில் ஆரம்பிப்பது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளீயிடப்பட்ட சுற்று நிருபம் கல்வி அதிகாரிகளும், பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வும், தெளிவூட்டலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படாமல் இருப்பதும், அவர்கள் முறையாக பின்பற்றாதிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் தனிமைப்படுத்தப்பட் ஒரு ஆசிரியை கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு வரவழைத்ததன் விளைவாக அங்கு ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியதுடன், பாடசாலையை மூட வேண்டிய துர்பார்க்கிய நிலையும் ஏற்பட்டது.

மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் அண்மையில் வெளியிட்ட சுற்று நிருபத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களை விசேட தேவையின்றி பாடசாலைக்கு உள்வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கும்படியும் குறிப்பிட்டிருந்த போதும், இந்த சுற்று நிருபத்தை மீறும் வகையில் சில அதிபர்கள் செயற்படுகின்றனர்.

எவ்வித தேவைப்பாடும் இன்றி ஆரம்பபிரிவு ஆசிரியர்கள் அணைவரையும் பாடசாலைக்கு வரவழைத்து காலை முதல் மாலை வரை பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்ந்தும் எமக்கு அறிய தருகின்றனர்.

நாம் தொடர்ந்தும் கடந்த காலங்களில் இருந்து வலியுறுத்தி வரும் மற்றுமொரு விடயம் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் ஆசிரியர், அதிபர் இடமாற்ற சுற்று நிருபங்களுக்கு அமைய ஆசிரிய, அதிபர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற 8 வருடம் பூர்த்தியடையாத ஆசிரியர்களுக்கு இடமாற்றம் செய்யும்ட அதேவேளை, 10, 15 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை.

ஆகவே, ஆசிரிய இடமாற்றத்தை தீர்மானிப்பது அதிபர்களா ? அல்லது ஆசிரிய இடமாற்ற சபையா ? அல்லது வேறு ஏதும் செல்வாக்கு செலுத்துகின்றதா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது.

ஆகவே சுற்று நிருபங்கள் முறையாக பின்பற்றாத பட்சத்தில் எதிர்காலத்தில் கல்வி துறையில் பாரிய பின்னடைவு ஏற்படுவதற்கான சாத்தியகூர்களை கவனத்திற்கொண்டு முறையாகக சுற்று நிருபங்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.