நுவரெலியா மாவட்டத்தில்,ஜனாசாக்களை எரிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து



 (க.கிஷாந்தன்)

கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.12.2020) நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்களிலும் அமைதி போராட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில், முதற்கட்டமாக மஸ்கெலியா நகரில் மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் அமைதி போராட்டம் நடைபெற்றது.

“இலங்கை அரசே” கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லீம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பதாதைகளையும், வெள்ளை கொடிகளையும் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் அரசியலமைப்பின் படி எல்லா மதங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரததில் இந்த கொரோனாவால் மரணிக்கும் நபர்களுடைய சடலங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்குமான ஆலோசனையை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களின் மத உரிமைக்கு அப்பால் அவர்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் சகல தரப்பும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் கூட இதற்கு எதிர்பாகவும் ஆரப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதை எதை குறிக்கின்றது என்றால் இந்த நாட்டில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் உட்பட நல்லிணக்கம் சமாதானம் நல்லுறவு போன்றவைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே சுமூக உறவில் விரிசல் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது.

ஆகவே மலையக சமூகம் என்ற ரீதியில் இதற்கு பாரிய எதிர்ப்புகள் தெரிவிப்பதோடு அரசாங்கம் உடனடி தீர்வை எட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த பல தசாப்பதங்களாக சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் மலையக மக்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வந்திருக்கும் அதேவேளை ஏனைய சமூகங்களிலிருந்து இவர்கள் வேறுப்படுத்தி காட்டப்படும் பாராபட்சமான நிலை இந்த நாட்டில் காணப்படுகின்றது.

அதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் இன்னுமொரு சிறுபான்மை இன மான முஸ்லீம் சமூகத்தினுடைய உரிமைகளுக்கு பாதிப்பு விளைவிப்பது இந்த நாட்டின் ஜனநாயக்க உரிமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே அரசு காலம் தாழ்த்தாது பாரபட்சமின்றி நடுநிலைமையோடு செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.