சம்மாந்துறையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை.


ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணத்தில் உருவான  "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (31) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம் வாஜித் அலி ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நேர்முக தேர்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் , பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல் மஜீட், சம்மாந்துறை சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம், மல்வத்தை 24 ஆவது பிரிவின் இராணுவ அதிகாரி அனஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை மேற்கொண்டனர்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நேர்முக தேர்வுகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் "பல்நோக்கு அபிவிருத்தி பணி உதவியாளர்களாக" நியமனம் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.