ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறினால் எந்தவொரு நாடும் பின்விளைவுகளைச் சந்திக்கும்



 ஐக்கிய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல், பயண தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான அறிக்கையை வரவேற்கின்றோம், மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுவதை பலர் அவதானித்திருப்பார்கள். இது ஒரு தற்செயல்நிகழ்வு.

கடந்த காலங்களில் மூன்று தடவை ஐ.நா. பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியபோதிலும், அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு காரணம்.

ஐக்கி யநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதன் பின்னர் அதற்கான இயல்பான விளைவுகள் உருவாகும்.

யுத்தகால பொறுப்புக்கூறும் பொறிமுறையை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் இலங்கை கலப்புபொறிமுறைக்கு சம்மதம் வெளியிட்டது. எனினும் பின்னர் முன்னர் ஏற்றுக்கொண்டபடி அவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை.

கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் சம்மதம் அவசியம்.

நாடு தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல், பயண போக்குவரத்து தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது பதது வருடத்தின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகின்றது. யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு இலங்கைக்கு பத்து வருடங்கள் வழங்கப்பட்ட பின்னரும் அது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியுள்ளது.” என்றுள்ளார்.