சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடித்தடைப்பு.


 

சம்மாந்துறையில்  போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை,  பொலிஸாருடன்  இணைந்து  இன்று  இரவு பிடிக்கப்பட்டு பிரதேச சபையின் முன்பாகவுள்ள வளவில் அடைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம்  ஏற்படும் நிலையை கவனத்தில் கொண்டும்  இது தொடர்பாக பொதுமக்களினால் பிரதேச சபையின் மீது முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது.

இதற்கமைவாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள்  பிடிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச சபையினால்  கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவை  அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் இம்மாட்டு  உரிமையாளர்கள் ஒரு மாட்டிற்கு  தண்டப்பணமாக 5,000.00 ரூபாய் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவாக மேலதிகமாக 1,000.00 ரூபாய் அறவிடப்படும் மேலும் 03 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சம்மாந்துறை பிரதேச சபை அலுவலகத்தின்  முன்பாகவுள்ள வளவில்  பிடிக்கப்பட்ட மாடுகள்  அடைக்கப்பட்டுள்ளமையினால்  இம்மாடு உரிமையாளர்கள் உடனடியாக தண்டப்பணத்தினை செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.