நானுஓயா பஸ் விபத்தில் 13 பேர் பலத்த காயம்



 (க.கிஷாந்தன்)

 

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில்  13 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னே சென்ற பவுஸர் ஒன்றுடன் மோதி இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

குறித்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இவ்விபத்து பஸ்ஸில் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.

 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.