ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8 ஆம் பிரிவு வஸ்தியான் வீதியில்; மாணவி ஒருவர் உள்ளிட்ட குடும்பமொன்று கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதை கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இன்று பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் மேற்கொண்டனர்.

குறித்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் எட்டுப்பேரையும் வெட்டியும் எட்டிப்பாராத பொலிசார், நாதன் குடும்பத்திற்கு தக்க தண்டனை வழங்குங்கள், வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், வஸ்தியான் வீதியை விட்டு அவனை வெளியேற்றுங்கள், சிறுவர் வன்முறையை தடுப்போம் போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டையினை தாங்கி நின்றனர்.

இதன் பின்னர்; குறித்த சம்பவத்திற்கு பொறுப்பானவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனும் மகஜரினையும் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்டத்தினருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் கையளித்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபரின் நாய் மலம் கழித்ததில் நேற்று முன்தினம் (21) ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் சண்டை ஏற்பட்டதாகவும் தாக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்த தாக்குதலை மேற்கொண்டவரின் தலைமையிலான கும்பலொன்று பொல்லு கம்பி தடிகள் சகிதம் சாரமரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட 7பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்; இன்னுமொருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இதில் வலது கையில் காயமடைந்த இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவியும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலும் தாக்கியவர் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தும் அவரால் குறித்த பகுதிக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதற்கு முன்பும் குறித்த நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவரின் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் நிலைமை தொடர்பில் பிரதேச செயலாளருடன் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.