டெவோன் நீர்வீழ்ச்சியில்யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்


 .


(கிஷாந்தன்)

திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய 3 யுவதிகளும் திம்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

97 மீட்டர் பள்ளத்திலேயே குறித்த யுவதி விழுந்துள்ளதாகவும், யுவதியை தேடி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை திம்புளை – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.