(க.கிஷாந்தன்)
" மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையின்போது மேற்படி மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.
அட்டனில் 14.02.2022 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியா சென்று, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தினார். இதன்போது அதிகாரப்பகிர்வின் அவசியத்துவம் பற்றி இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுக்கும், வெளிவிவகார அமைச்சருர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கின்றது. இப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, 30 வருடங்கள் கடந்தும் அதிகாரப் பகிர்வு நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அன்று வடக்கு, கிழக்கு பிரச்சினை பற்றியே கூடுதல் கரிசணை கொள்ளப்பட்டது. எனவே ,87 காலப்பகுதியில் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அதிகாரப்பகிர்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவில்லை.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுள் மூன்று இனங்கள் உள்ளன. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்கள். எனவே, அதிகாரப்பகிர்வு பொறிமுறையின்போது இம்மூன்று இன மக்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தம் இந்திய தரப்பில் இருந்து விடுக்கப்பட வேண்டும்." - என்றார்.

Post a Comment
Post a Comment