மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது




 (க.கிஷாந்தன்)

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் - எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது. எனவே, காங்கிரஸை நம்புங்கள். அந்த அமைப்பு உங்களை ஒருபோதும் கைவிடாது - என்று இதொகாவின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.  

 

பாலின சமத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மாநிலத்திற்கான மகளிர் தின விழா 13.03.2022 அன்று காலை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

 

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

 

" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெண்களும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். காங்கிரஸில் பெண்களே அதிகளவு அங்கத்தவர்களாக உள்ளனர். எமது பலம் பெண்கள்தான். அதனால்தான் எல்லா விடயங்களிலும் நாம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிவருகின்றோம். சபைகளில் உயர் பதவிகளையும் வழங்கியுள்ளோம் .  

 

காங்கிரசுக்கு சோதனை வந்த காலக்கட்டங்களில் எல்லாம் நீங்கள் எமக்கு பக்க பலமாக இருந்துள்ளீர்கள். இனியும் இருப்பீர்கள். நாமும் உங்களை கைவிடமாட்டோம்.  

 

இன்று தோட்டக் கம்பனிகளின் அடாவடி அதிகரித்துள்ளது. எமது தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.  

 

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது. இவை பற்றி காங்கிரஸ் கதைப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். நாம் அரச பங்காளிகளாக இருந்தாலும், மக்களுக்கு பிரச்சினை என்றால் மௌனம் காக்கமாட்டோம். ஐயா தொண்டமான் காலம் முதல் தற்போதைய தலைவர் ஜீவன் தொண்டமான் காலம்வரை, மக்கள் பக்கமே காங்கிரஸ் நின்றுள்ளது." - என்றார்.