மனித உரிமைகள் மற்றும் சட்டவாக்கம் தொடர்பான செயலமர்வு



 


வி.சுகிர்தகுமார்   

  மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான  செயற்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான  நிகழ்வினை அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் அரச உத்தியோகத்தர்கள் இளைஞர்கள் மற்றும் சமூக தலைவர்களையும் உள்வாங்கியதான மனித உரிமைகள் மற்றும் சட்டவாக்கம்  தொடர்பான இரண்டுநாள் செயலமர்வு நேற்றும் இன்றும் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் நடைபெற்றது.

பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின்  மத்திய செயற் குழு தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான செல்வி அனுசியா சேனாதிராஜா, இணைப்பாளர் வாணி சைமன் மற்றும்  திட்ட இணைப்பாளர் நடராஜா சுமந்தி, திட்ட பொறுப்பாளர் செல்வபதி கங்கேஸ்ரி  ஆகியோரின் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட செயலமர்வில் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பொத்துவில் இறக்காமம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த தமிழ்,சிங்கள முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வின் வளவாளராக சட்டத்தரணி எம்.சுதர்சினி கலந்து கொண்டு செயலமர்வை நடாத்தி வைத்தார்.

மனித உரிமைகள் மற்றும் இலங்கையின் சட்டவாக்கம் தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் அவற்றிற்காக காணக்கூடிய தீர்வுகள் ஆரம்பகாலத்தில் இலங்கையில் இருந்த அரசியலமைப்பு தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு தொடர்பிலும் தெளிவூட்டினார்.

அத்தோடு மொழி உரிமை அதன் முக்கியத்துவம்  மொழி உரிமை மீறப்படும் சந்தர்ப்பங்கள் மொழி அறிவின்மையால் இனங்களுக்கிடையிலே ஏற்படுகின்ற தவறான புரிதல்கள் அரச அலுவலங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் முறைமைகள் தொடர்பாகவும் மொழி அறிவின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இச்செயற்பாடுகளானது எதிர்காலத்திலும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.