அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் கவலையை போக்குவேன்



 


(வி.சுகிர்தகுமார் 


  அம்பாரை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்ட நான் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த ஆளுங்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லை எனும் கவலையை போக்கவே ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவராகவும் முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமாக டபிள்யு.டி.வீரசிங்க தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்ற மதஸ்தலங்களுக்கான சூரியமின்கல பிறப்பாக்கி வழங்கும் ஆரம்ப கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மற்றும் மின்சக்தி வலுசக்தி; அமைச்சர் கஞ்சன விஜயசேகர இராஜங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் ஆகியோர்களுக்கிடையிலே இடம்பெற்ற கலந்துரையாடலின் பயனாக  நாடளாவிய ரீதியில் உள்ள மதஸ்தலங்களுக்கும் முற்றிலம் இலவசமாக சூரியமின்கல பிறப்பாக்கிகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டன.

இதற்கமைவாக ஒவ்வொரு மதஸ்தலங்களுக்கும் 5 கிலோ வற்ஸ் சக்தியுடைய சூரியமின்கல பிறப்பாக்கிகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 43 மதஸ்தலங்களுக்கான முற்றிலம் இலவசமான சூரியமின்கல பிறப்பாக்கி வழங்கும் விண்ணப்ப கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

முன்னதாக நிகழ்விற்கு வருகை தந்த அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்கவை பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தினை தொடர்ந்து சூரியமின்கல பிறப்பாக்கி வழங்கும் விண்ணப்ப கடிதங்கள் வழங்கப்பட்டன.


இக்கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹுசைன்டீன் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளருமான கிந்துஜா பிரதேச சபை உபதவிசாளர் விக்டர் ஜெகன்  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர்கள் சமஸ்தலங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.