கௌரவிப்பு





நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் மலேரியா ஒழிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 2023.12.17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

மலேரியா தடை இயக்க பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், பிராந்திய பொதுச் சுகாதார மற்றும் தர முகாமைத்துவ பிரிவுகளின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.ஹில்மி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கணக்காளர்  உசைனா பாரிஸ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையின் கீழ் நடாத்தப்பட்ட தெரிவின் பிரகாரம் பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவில் திறம்பட பணியாற்றிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் இந்நிகழ்வின் போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சுமார் 18 வருடங்கள் குறித்த பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. என்.சந்திரலிங்கம் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த குறித்த பிரிவு உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அண்மையில் பதவியேற்று பணியாற்றி வருகின்ற வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் அவர்களை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவினர் வாழ்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பனிப்பாளராக பணியாற்றி பிராந்திய சுகாதாரத்துறைக்கு அளப்பெரிய சேவையாற்றிய முன்னாள் பிரதி பிராந்திய பணிப்பாளரும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் அவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.