மாணவர் பாராளுமன்ற நிகழ்வு





( காரைதீவு சகா)

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் முதல்  மாணவர் பாராளுமன்ற நிகழ்வு அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில்
நேற்று(14) வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு பார்வையாளர்களாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையின் வலய மாணவர் பாராளுமன்ற இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எச். நைரூஸ்கான், பாடசாலை  வலுவூட்டல் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அதிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஆசிரியர்கள் பான்ட் வாத்தியம் முழங்க பிரதான வீதியிலிருந்து  அழைத்து வரப்பட்டனர்.

தேசியக் கொடியை உதவிக்கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான், மாகாண கொடியை உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, பாடசாலை கொடியை அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்றியதும் தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன்  சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அமைச்சர்களின் கன்னி உரையும் இடம்பெற்றது.

உதவிக்கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான்,  உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அமர்வு பற்றி   அவதானிப்புரையாற்றினர்.

முறையான பாராளுமன்ற அமர்வு போன்று மாணவர் பாராளுமன்ற நிகழ்வு முறைப்படி செங்கோல் சபாநாயகர் பிரசன்னத்துடன் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றது.

நிகழ்வுகள் அனைத்தும் மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.

சிரேஸ்ட ஆசிரியர் ந.கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார்.