அரசமுறை பள்ளி மீது, வீழ்ந்தது




 


(வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை  அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில்  பாரிய மரங்கள் அடியோடு வீழ்ந்து பாடசாலை பெரும் அனர்த்தத்திற்குள்ளானது.

நேற்று முன் தினம்(31) மாலை வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சம்மாந்துறை அல்ஹர்  வித்தியாலய த்தில் இருந்த நான்கு  பாரிய மரங்கள் வீழ்ந்து பாடசாலைக்கு பெரும் அனர்த்தத்தை விளைவித்துள்ளது என அதிபர் ஏ.அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

பாரிய ஆலமரம் உள்ளடங்களாக நான்கு மரங்கள் அடியோடு சாய்ந்து மூன்று பாரிய கட்டிடங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகின.

அண்மையிலே திறந்து வைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டிடமும் அதில் பாரிய சேதத்துக்குள்ளானது.

60 .20 அளவிலான புதிய கொட்டகைகட்டிடம் ஒன்றும் மாணவர் தளபாடங்கள் சகிதம் தரைமட்டமாகியது.

 மின்சார கம்பம் ஒன்றும் அடியோடு வீழ்த்தப்பட்டது .

இவ் அனர்த்தம் பற்றி கேள்வியுற்றதும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ. நசீர் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட குழுவினர் நேற்று(1) காலை சென்று பார்வையிட்டனர்.

 அதிபர் ரஹீம் இந்த அனர்த்தம் தொடர்பாக பூரணவிளக்கம் அளித்தார்.

 இதேவேளை சம்மாந்துறை கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ. நசீர் இந்த அனர்த்தம் தொடர்பாக கேள்விப்பட்ட மறுகணம் அம்பாறை மாவட்ட செயலகம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரதேச சபை மற்றும் வலயக்கல்விப் பணிமனை ஆகிய நிறுவனங்களுக்கு  தகவலை வழங்கி மரங்களை அகற்றும் பணிக்கு உதவியிருக்கின்றார்.

இராணுவம் மற்றும் குறித்த தரப்பினரும் விரைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 ஒரு கோடி ரூபாய்க்கு மேல்  சேதம் விளைவித்திருக்கிறது என்று வலயக்கல்விப் பணிமனையின் கட்டிடங்கள் பிரிவு தெரிவிக்கின்றது.

 நேற்று(1)பகல் வரை இந்த மரங்கள் முற்றாக அகற்றப்படவில்லை அந்த பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 கொட்டு மழைக்கு மத்தியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.