பாடசாலைகளின் "மேம்பாட்டு பேரவை" உதயம்





(நூருல் ஹுதா உமர்)

மருதமுனைப் பாடசாலைகளின் கல்வி மேம்பாடுகளை ஒருநிலைப்படுத்தி, மாணவர்களை ஒழுக்க விழுமியங்களை நோக்கி திசைமுகப்படுத்தும் நோக்கில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் நிமித்தம் "மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவை" என்ற அமைப்பானது மருதமுனையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் மேற்பார்வையுடன் மருதமுனைப் பாடசாலை அதிபர்களின் கூட்டிணைவில் இதற்கான ஆரம்பக் கூட்டம் (10) மருதமுனை அல்-ஹம்றா  வித்தியாலயத்தில் கல்முனை  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிருவாகத்திற்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப் பாளர்களான எம்.எச்.றியாஸா(கல்வி முகாமைத்துவம்), பீ. ஜிஹானா ஆலிப் (கல்வி அபிவிருத்தி) உள்ளிட்ட அதிகாரிகளுடன்  மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

மருதமுனை கல்வி மேம்பாடு மற்றும்  மாணவர்களின் ஒழுக்கச் சீராக்கம் ஆகியன தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. இதன் போது நோன்புகால வணக்க வழிபாடுகள் கருதி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அதில், நோன்பு 20 வரை உயர்தரம் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் பாடசாலை நேரசூசி வகுப்புக்கள் மதியம் 12 மணிக்கு  முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்றும் ரமழான் பிந்திய பத்தில் அதாவது நோன்பு 20 முதல் பெருநாள் முடியும் வரை எந்த மேலதிக வகுப்புக்களையும் நடத்த முடியாது. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்கள் எதனையும் நடத்துவதில்லை. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மேலும் வீடுகளிலும், பிரத்தியேக நிலையங்களிலும் மேலதிக வகுப்புக்களை நடத்துகின்றவர்கள் மதியம் 12 க்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும். இவ் அறிவுறுத்தல்களை மீறி வகுப்புக்களை நடத்தும் பாடசாலை ஆசிரியர்கள் இனங்காணப்பட்டு அதிபர்களினூடாக அவர்களுக்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரம்  10, 11  மாணவர்களுக்கு  திங்கள் முதல் வியாழன் வரை பாடசாலைகளின் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். அவை மதியம் 12 மணிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும். பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் இடையூறாக செயற்படும் மாணவர்களை விஷேட ஆசிரியர் செயலணி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தல், பள்ளிவாசல்களினூடாக குத்பாக்களில் அல்லது  குத்பாக்களின் பின்னர் மாணவர்களுககான குறுகிய நேர வழிகாட்டல் ஆலோசனைகளை ஏற்பாடு செய்தல் (பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு)

மாணவர்களின் நடத்தைகள் பொது இடங்களிலும்  அவதானிக்கப்பட்டு அவை மாணவர் தலைவர், வகுப்புத் தலைவர்  தெரிவுகளில் கருத்தில் கொள்ளப்படல், நோன்பு காலத்தில் ஆசிரியர்களின் செயற்பாடுகள்  சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கு பாடசாலை மட்டத்தில் வலியுறுத்தல்

மேற்படி விடயங்களை அவதானித்து  நோன்பு 10 இல் பேரவை கூடி அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்தல், பேரவையின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இதனை முன்னேற்பாடாகக் கொண்டு ஏனைய கிராமங்களிலும் கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தமது உரையில் தெரிவித்தார்.

நோன்பு விடுமுறை முன்னெடுப்புக்கள் தொடர்பாக  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் பள்ளிவாசல்களினூடாக அறிவிக்கப்படுவதுடன் மருதமுனை உலமா சபையினரின் கவனத்திற்கு இவற்றைக் கொண்டு வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

மருதமுனையி்ன் கல்வி மற்றும் மார்க்க விழுமியங்களை சீராக்கம் செய்தல் என்கின்ற எண்ணக்கருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டுப் பேரவையின் இலக்குகளை அடைய மருதமுனையின் மார்க்க அமைப்புக்கள், புத்திஜீவிகள்,பொதுநிறுவனங்கள்,பொதுமக்கள் ஆகியோர் ஒத்துழைப்புக்களை வழங்க.வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது