நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்கப்பட வேண்டும்



நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. 


இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 


மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 


உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

(Tamilan)