தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம் (25) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.
வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.
இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம்(24) வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.
இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.
பெயர் பதாகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ்பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்கமுடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக்கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேசசபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து. இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வீரமுனை செய்தியாளர்


Post a Comment
Post a Comment