நூருல் ஹுதா உமர்
அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி (செவ்வாய்கிழமை) ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இத்தீர்மானம் நேற்று 28ஆம் திகதி நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய Letter no. UGC/HR/2/3/264 dated 03.12.2025 மற்றும் Letter no. UGC/L/40 dated 18.12.2025 எனும் இரண்டு கடிதங்களே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்தம் தேவையானதுதான் என்றாலும், அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்துவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக, கல்வி அமைச்சரும் பிரதமரும் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உப தலைவர் எம். ஏ. எம். சமீம் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பாக பீடாதிபதி மற்றும் திணைக்களத் தலைவர் நியமனம் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை உடனடியாக திரும்பப் பெறாவிடில், தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Post a Comment
Post a Comment