அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியின் புதிய கட்டிடம் திறப்பு மற்றும், பட்டமளிப்பு விழா



 


அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியின்

புதிய கட்டிடம் திறப்பு மற்றும் 7ஆவது பட்டமளிப்பு விழா


✍️

அஷ்ஷேய்க் ஜுனைட் நஸீர் நளீமி


அக்கரைப்பற்றில் அமைந்துள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியின் புதிய கட்டிடம் இன்று காலை வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.

இதனுடன் இணைந்து, இக் கல்லூரியின் 7ஆவது பட்டமளிப்பு விழாவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.


அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள தப்லீக் மர்க்கஸில் இதுவரை இயங்கி வந்த இந்த அறபுக் கல்லூரி, இப்போது அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிய நிரந்தர கட்டிடத்திற்குத் தன்னுடைய செயல்பாடுகளை இடம் மாற்றியுள்ளது.

இந்த இடமாற்றம், இக்கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், கல்வித் தர மேம்பாட்டுக்கும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.


2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம் மத்ரஸாவின் அதிபராக

அஷ்ஷெய்க் எம்.எம். கலாமுல்லாஹ் (ரஷாதி) அவர்கள் பணியாற்றி வருவதுடன்,

அவர் அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா கிளையின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

அவரது திட்டமிடலும் வழிநடத்தலும், இந்தக் கல்லூரியை ஆன்மிகம், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் கல்வி மையமாக உருவாக்கியுள்ளது.


இந்தக் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக அஷ்ஷெய்க் அஷ்ரஃப் ஷர்க்கி அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

அவர் தற்போது கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்,

அஷ்ஷெய்க் றிஸ்வி முஃப்தி அவர்கள் கலந்து கொண்டு,

புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன்,

7ஆவது பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையையும் நிகழ்த்தினார்.


மேலும், கொழும்பு மர்க்கஸில் இயங்கும் ரஷாதிய்யா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பத்வா குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். சல்மான் (தப்லீகி) அவர்கள்

சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தார்.


அத்துடன்,

அகில இலங்கை தப்லீக் ஜமாஅத்தின் ஷூறா அங்கத்தவர் யூசுப் ஹாஜியார்,

மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் மூத்த புதல்வர்

றஹ்மதுல்லாஹ் பலாஹி,

முன்னாள் அக்கரைப்பற்று ஊர் உலமா சபைத் தலைவர் எம்.எம். அப்துல் லலத்தீப் பஹ்ஜி, அம்பாறை மாவட்ட உலமா சபைத் தலைவர் ஹாஷிம் சூரி உள்ளிட்ட

பல வெளிநகர், உள்ளூர் மத, கல்வி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


மேலும்,

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்,

உதவி பிரதேச செயலாளர் ராஷித் யஹ்யா (நளீமி),

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய அரச அதிகாரிகளும்

நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.


ஒழுங்கமைப்பு – நிகழ்வின் தனிச்சிறப்பு


இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக,

நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்கூட்டியே மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு,

அழகிய ஒழுங்கமைப்புடன், நேர்த்தியான நடைமுறையில் நடைபெறுதல் அமைந்தது.


வருகைதந்த அதிதிகளை வரவேற்பதிலிருந்து,

நிகழ்ச்சித் தொடக்கம்,

முக்கிய உரைகள்,

பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கல்,

கௌரவிப்பு நிகழ்வுகள்,

நிகழ்ச்சி நிறைவு வரை,

ஒவ்வொரு கட்டமும் ஒழுங்காகவும், கால வரம்பிற்குள் நடத்தப்பட்டமை,

நிகழ்வின் மேன்மையை மேலும் உயர்த்தியது.


நிகழ்விடத்தின் அலங்காரம்,

அமர்வு ஏற்பாடுகள்,

ஒலிபெருக்கி வசதிகள்,

மேடை ஒழுங்கு,

மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு நடைமுறை ஆகிய அனைத்தும்

ஒரு முதிர்ந்த நிர்வாகத் திறனையும், ஒற்றுமையான குழு பணியையும் வெளிப்படுத்தின.


குறிப்பாக,

மாணவர்களும் தன்னார்வலர்களும் ஒழுக்கத்துடனும் மரியாதையுடனும் செயல்பட்ட விதம்,

இக்கல்லூரி மாணவர்களின் ஒழுக்கப் பயிற்சியின் வெளிப்பாடாக அமைந்தது.


இந்தக் கல்லூரியில்

ஷரீஆ கல்வியுடன் இணைந்து,

NVQ Level 4 தொழிற்கல்வி பாடநெறிகள்,

அரச கரும மொழித் திணைக்களத்தின் மூலம் நடத்தப்பட்ட சிங்கள மொழிப் பாடநெறிகள்

என்பவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அத்துடன்,

இங்கிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களும்

மேடையில் பாராட்டப்பட்டனர்.


நிகழ்வின் போது,

அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் அப்துல் லத்தீஃப் ஹஸ்ரத்,

ஷெய்குல் பலாஹ்வின் புதல்வர் றஹ்மதுல்லாஹ் ஹஸ்ரத்,

மற்றும் ஹாஷிம் சூரி ஆகியோர்

இஸ்லாமிய கல்வி மற்றும் சமூக சேவைகளில் ஆற்றிய பணிகளை மதித்து

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


மேலும்,

புதிய கட்டிடத்தை நிர்மாணிக்க முன்னின்று உழைத்த

மஜீத் ஹாஜியார் அவர்களும்

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், கட்டிடப் பணிகளில்

எம்.எம். தாஹிர் TA அவர்களின் பங்களிப்பும்

நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.


இந்த கல்வி நிறுவனம் உருவாகக் காரணமான

நிலத்தை வக்ஃபு செய்த மர்ஹூம் உதுமாலெப்பை அவர்களையும்,

இதற்காக துணை நின்ற

முஸ்தஃபா மெனேஜர் அவர்களையும்

நிகழ்வில் சிறப்பாக நினைவுகூர்ந்தனர்.


கானடிப் பள்ளியாக ஆரம்பித்து,

ஹிஃப்ழ் மத்ரஸா,

மர்க்கஸ்,

இன்று நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் என்ற

வளர்ச்சி வரலாறும் நிகழ்வில் நினைவுபடுத்தப்பட்டது.


இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்

நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.


இதனிடையே,

இன்றைய பட்டமளிப்பு விழாவில்

பல மாணவர்கள் ‘சித்தீதி’ பட்டம் பெற்று

கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குத் துவங்கினர்.


இந்த நிகழ்வு,

அக்கரைப்பற்றில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்கான

முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன்,

ஒழுங்கமைப்பு, திட்டமிடல் மற்றும் கல்வித் தரம் என்பவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.