சந்திப்பு



 நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். அஸ்ரப் தாஹீர் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையிலான காரைதீவு பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு காரைதீவு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, காரைதீவு பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள், அபிவிருத்தி திட்டங்கள், உள்ளூர் நிர்வாக சவால்கள் மற்றும் எதிர்கால முன்னேற்ற முயற்சிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

குறிப்பாக, உட்கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் வசதிகள், சாலை அபிவிருத்தி, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய துறைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர். இவற்றுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அஸ்ரப் தாஹீர் உறுதியளித்ததாக காரைதீவு பிரதேச சபை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பேதங்களற்ற வகையில் ஒருங்கிணைந்து பிரதேசத்தின் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்திய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான வை.கோபிகாந், ஏ.ஆர்.எம். ஹில்மி, சின்னத்தம்பி சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.