
பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்பவம்
எஸ்.ரி.ஜமால்டீன்
பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை (11.02.2016) விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
நீதிபதி முன்னிலையில் நேற்று சனிக்கிழமை (30) மாலை ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதி ஆண்டு மாணவன் ஏ.எம்.அஸ்வர் கடந்த 29 ஆம் திகதி (29.01.2016) மாலை 4.50 மணியளவில் தனது சக மாணவர்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் ; இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தலைக்கவசத்தினால் அஸ்வரின் தலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான அஸ்வர் மயக்கமான நிலையில் ஒலுவில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட மூவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.கைதான மூவரும் சம்மாந்துறைப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளான மாணவன் மூதூர் பிரதேசத்தை சேர்ந்தவர்.
கடந்த 26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் பேரவைக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தாக்குதலுக்குள்ளான அஸ்வர் என்ற மாணவர் உட்பட 13 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் போது தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
