சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு 17 கட்சிகள்




(க.கிஷாந்தன்)

உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

22.02.2016 அன்று அட்டன் லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுப்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் கிடையாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் யாராலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முடியாது.

பொது தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிட்ட மாற்று கட்சியினரே இந்த சதி முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுதந்திர கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சில விஷமிகள் சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது. என்னை அவ்வளவு இலகுவில் வெளியேற்ற முடியாது. நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்றார்.