'சம்பந்தன் எல்டீடீயை சேர்ந்தவரா?





கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன், இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் விதத்தில் பிரதமர் இங்கு பேசினார். 'அந்தக் காணிகள் இராணுவத்துக்கோ அரசுக்கோ சொந்தமானவை அல்ல. அந்தக் காலத்தில் யுத்தம் காரணமாக இராணுவம் அவற்றை கையகப்படுத்தியிருந்தது. அந்தக் காணிகளை ஓரிரு மாதங்களில் இராணுவத்தினர் மீள ஒப்படைப்பார்கள். அந்தக் காணிகள் விடுவிக்கப்படுமா இல்லையா என்று மக்களுக்கு சந்தேகம் இருந்ததால், அங்கு பிரச்சனை ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தன் அங்கே சென்றார்' என்றார் ரணில் விக்ரமசிங்க.
'சம்பந்தன் எல்டீடீயை சேர்ந்தவரா?- நாட்டை பிரித்தாலும் அவருக்கு நன்மை இல்லை. அவர் இருப்பது திருகோணமலையில். அவர் இருப்பது எங்களோடு. சம்பந்தர் இராணுவ முகாம் பக்கத்துக்கு செல்லவில்லை. காணிகள் இருக்கும் பக்கத்துக்கு தான் சென்றார் என்று இராணுவத் தளபதியே கூறினார்' என்றார் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
ஆனால், குறித்த கிளிநொச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தென்னிலங்கையில் உள்ள சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
தீவிரவாதத்தை தோற்கடித்து, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சேர்ந்து கட்டியமைத்த ஜனநாயக மற்றும் சுதந்திரமான சூழலை பாதுகாப்பதற்கு ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்றும் ரணில் கூறினார்.
இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பந்தனை கைதுசெய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.