சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு இடையில் வாக்குவாதம்! ஜனாதிபதி தலையீடு



அவென்காட் நிறுவனம் தொடர்பில் எதிரிகளான அமைச்சர் சரத் பொன்சேகாவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் நேற்று அமைச்சரவைக்கூட்டத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவைக்கூட்டம் நேற்று இடம்பெற்றபோது, தாம் பௌத்த பிக்குகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்பு கோரியமையை சரத் பொன்சேகா ஆட்சேபித்தார்.தாம் கூறிய கருத்து, பௌத்தபிக்கு ஒருவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.
இந்த பௌத்தபிக்குவின் கருத்து மஹிந்த ராஜபக்சவின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டது என்ற அடிப்படையிலேயே தாம் அது தொடர்பில் பேசியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சார்பிலேயே மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.
அத்துடன், பௌத்த பிக்குகளின் ஆதரவின்றி அரசாங்கத்தை நகர்த்தமுடியாது என்று விஜயதாஸ ராஜபக்ச குறிப்பிட்டார். இதன்போது தலையிட்ட ஜனாதிபதி, இருவரின் கருத்துக்களும் முக்கியமானவை என்றுக்கூறி அமைதியை ஏற்படுத்தினார்.