மே தின நிகழ்வுகள்



இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இதன்படி கொழும்பு, காலி, ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மேனதின ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அந்தவகையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதானப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் காலியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

மேலும், பிற்பகல் 01.00க்கு தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் பகுதியில் இருந்தும் காலி மஹ மோதர வைத்தியசாலைக்கு அருகில் இருந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன. 

பின்னர் காலி சமனல விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாகச் செல்லும் இவர்கள் அங்கு மே தின நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலும் மேதினப் பேரணி ஒன்று கிருளப்பனை லலித் அதுலத்முதலி விளையாட்டரங்கில் வேறாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின பேரணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளையில் இடம்பெறவுள்ளது. 

மேலும் இவர்களது பேரணி மாளிகாவத்தை பீடி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி, ஆமர்வீதி, பஞ்சிகாவத்தை, மருதானை மற்றும் புஞ்சி பொரளை ஆகிய பகுதிகள் ஊடாக பொரளை நோக்கி பயணிக்கவுள்ளது. 

இதுஇவ்வாறு இருக்க மக்கள் விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வுகள் ஹெவ்லொக் நகரின் கீ.பி.ஆர்.சி விளையாட்டரங்கிலும், ஜனநாயகக் கட்சியின் மே தின நிகழ்வுகள் பத்தரமுல்லையிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதின நிகழ்வுகள் நுவரெலியாவிலும் நடத்தப்படவுள்ளன.