நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும்: இலங்கை மக்கள் கருத்து



மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசியல் சட்டமொன்றை உருவாக்குமாறு நாடு முழுவதும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக புதிய அரசியல் யாப்பு தொடர்ப்பாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்த விசேட குழு தெரிவித்துள்ளது.
''பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யாப்பு''
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அந்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்தார்.
தாங்கள் நாடு முழுவதும் சென்று புதிய அரசியல் யாப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்ப்பாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்ததாக கூறிய அவர் இந்த நிகழ்வின் போது தாங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
விசேடமாக அரச நிர்வாக துறையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாக தாங்கள் பாரிய பிரச்சினைகளை சந்தித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
''சுலபமாக பரிகாரங்கள் பெறும் கட்டமைப்பு''
அதேபோல், மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது, சுலபமாக பரிகாரங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய கட்டமைப்பொன்று புதிய அரசியல் யாப்பின் முலம் உருவாக்கப்பட வேண்டுமென்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வழக்கறிஞர் லால் விஜேநாயக்க கூறினார்.
நீதிமன்ற சுதந்திரத்தை பலப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகள் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க, தற்போது நாட்டில் நிலவும் அரசியல் கலாச்சாரம் குறித்து மக்கள் பாரிய அளவில் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
''கட்சித் தாவல்களை நிறுத்தக் கூடிய சட்ட விதிமுறைகள்''
அரசியல்வாதிகளின் கட்சித் தாவல்களை நிறுத்தக் கூடிய சட்ட விதிமுறைகள் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் அவ்வாறு கட்சித்தாவும் நபர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்து செய்யக் கூடிய சட்டங்கள் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று மக்கள் வேண்டுகோள் விடுத்ததாக அவர் கூறினார்.
''கல்வி அறிவு உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் பிரவேசிக்க வேண்டும்''
கல்வித் துறையில் ஓரளவு தகுதி பெற்ற நபர்களுக்கு மட்டும் அரசியலில் பிரவேசிக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்று மக்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க கூறினார்.
''ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும்''
மேலும், சிலர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கக் கூடிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்று கருத்துக்களை முன்வைத்துள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்த விசேட குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.