நிவாரணம் வழங்கத் தவறிய அரசு



வௌ்ளம் மற்றும் சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 10,000 ரூபாவும், சாலாவ ஆயுதக்களஞ்சிய வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகையும் உரியவாறு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சுமத்தினார்.
இதன் மூலம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளமை தெரியவருவதாக விஜித ஹேரத் கூறினார்.
இதனால் தொடர்ந்தும் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளதெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த குற்றஞ்சாட்டு தொடர்பில் வினவியபோது, சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட எவருக்கேனும் இழப்பீடு கிடைக்காவிட்டால், அதுகுறித்து மேன்முறையீடு செய்யமுடியும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இதேவேளை, உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.