நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திவிநேகும தினைக்களத்திற்கு சொந்தமான சுமார் 36 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு போலீசாரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
அவரது பிணை மனு இன்று அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பசில் ராஜபக்ஷவின் பிணை வேண்டுகோள் சம்பந்தமாக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

