மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடுப் பிரதேசத்தில் அமையவுள்ள மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்துக்கான முதற்கட்ட வேலைகள் 250 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2014ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகக் கட்டடத்தொகுதி ஆரம்பிப்பது தொடர்பான முன்மொழிவுகள் தேசியத் திட்டமிடல் செயலகத்திற்கும் தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் ரூபாய் 1000 மில்லியனுக்காக எதிர்பார்க்கப்பட்ட நிதி ஏற்பாட்டிற்கு இத்திட்டம் வரையப்பட்டிருந்தது.
தேசிய திட்டமிடல் செயலகத்தின் சிபாரிசுடன் அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டு 2015- 16ஆம் ஆண்டுகளில் பெறுகை நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது நிர்மாண வேலைகளுக்கான ஒப்பந்தம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் லிங் எஞ்ஜினியரிங் பிரைவேட்
( Link Engineering Pvt Ltd ) நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டத்தின் வடிவமைப்பினை கட்டடங்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. வரவு -செலவுத்திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு முதல் கட்டமாக 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு வருட காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் வகையில் முதல் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

