இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்கா வெற்றி



இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்கா 121 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
டேர்பன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
71 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்காவின் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இலங்கை அணி ஆரம்பத்தில் ஆதிக்கத்துடன் விளையாடியது.
எனினும், இலங்கை அணியின் அழுத்தங்களை லாவகமாக எதிர்கொண்ட தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் அணித்தலைவர் பெப் டு பிளசிஸ் ஆகியோர் சதம் கடந்து வலுவான நிலைக்கு அணியை இட்டுச்சென்றனர்.
இதற்கமைய, தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணியின் வெற்றி இலக்கினை 307 ஓட்டங்களாக நிர்ணயித்தது.
பதிலளித்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தினை எதிர்கொண்டது.
இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 75 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் தினேஷ் சந்திமால் மாத்திரம் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில், இலங்கை அணி 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் வேயென் பார்னெல் மற்றும் ஜே.பி டுமினி ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.