கண்டி வைத்தியசாலை ஒன்றில் பரிசோதனை செய்ய வந்த பெண்ணொருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 46 வயதுடைய தாய் ஒருவர் ஸ்கேன் பரிசோதனை செய்துக் கொள்வதற்காக கண்டி நகரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது ஸ்கேன் அறையினுள், சிறிய துணியில் அவரது கண்களை கட்டி கையடக்க தொலைப்பேசியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த கதிரியக்க நிபுணர் ஒருவர் கண்டி, குழந்தை மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்களை கட்டிய சிறிது நேரத்தின் பின்னர் சந்தேகமடைந்த குறித்த பெண் கண்ணில் இருந்து துணியை நீக்கிய போது சம்பவம் உறுதியாகியுள்ள நிலையில் இவ்வாறு புகைப்படம் எடுத்த கதிரியக்க நிபுணர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
குறித்த நபரை பிடிக்க முயற்சித்த போது காயமடைந்த இந்த பெண் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த நபரை கைது செய்து கையடக்க தொலைப்பேசியை சோதனையிட்ட போது அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ அதில் இருந்தமை உறுதியாகியுள்ளது.
இதற்கு மேலதிமாக மேலும் பல வீடியோ மற்றும் புகைபடங்கள் அந்த தொலைப்பேசி காணப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

