மதுபானசாலைகள் அமைப்பதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்து அமுல்படுத்தினோம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் அமைப்பதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்து அதனை அமுல்படுத்தினோம் என முன்னாள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆளுமை இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதை நிறுத்திக் காட்ட வேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது புதிதாக எதுவித மதுபானசாலையும் அமைக்க முடியாது என்ற முடிவை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அதற்குச் செயல்வடிவம் கொடுத்திருந்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுங்கான்கேணி, கிரான்குளம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இரண்டு பாதுபானசாலைகளை நாம் தடைசெய்தோம்.
சுங்கான்கேணியில் புதிய மதுபானசாலைக்காகக் கட்டப்பட்டு அரைகுறையாகக் காட்சியளிக்கும் கட்டிடத்தை இப்போதும் நீங்கள் காணலாம்.
ஆனால், நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வால்பிடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக் காலத்தில் கல்குடாவில் பத்தொன்பது ஏக்கர் காணியில் மதுபாபன தொழிற்சாலை அமைக்கப்படுவதைக் கூட்டமைப்பினரால் தடை செய்ய முடியவில்லை.
சர்ச்சைக்குரிய அந்த மதுபான உற்பத்தித் தொழிற்சாலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை, சாணக்கியம் இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிருமாணப் பணிகளை நல்லாட்சியிடம் சொல்லி நிறுத்திக் காட்டுங்கள் பார்ப்போம்’ என்று சவால் விடுத்துள்ளார்.