வத்தளையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது



கொழும்பு – வத்தளையில் சடலமாக மீட்கப்பட்ட வேலு அஜித்குமார் என்ற இளைஞர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வேலு அஜித்குமார் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தலையில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் இவர் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
தொழில் நிமித்தம் மாத்தளையிலிருந்து கொழும்பு வத்தளைக்கு சென்றிருந்த 20 வயதான வேலு அஜித்குமார், அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
எனினும், வேலு அஜித்குமாரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
உறவினர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் இன்று வினவியது.
தாக்குதல் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.