வில்பத்து வனப்பகுதியுடன் இணைந்த நான்கு வனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியல்ல. ஆனால் இதில் அநீதி நடந்துள்ளது என ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்விவகாரத்தில் எவருக்கும் பாதிப்பில்லாது தீர்வொன்று விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதியின் செயலாளருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜனாதிபதியின் செயலகத்தில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது;
ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தப்பட்ட வனப்பிரதேசங்கள் வனஜீவராசிகள் வலயமாகவும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தப்பட்ட வனப்பிரதேசங்கள் வனஜீவராசிகள் வலயமாகவும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
என்றாலும் அத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுவிட்டது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வனப் பிரகடன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பிரதேச மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தீர்வொன்று விரைவில் எட்டப்படும்.
முஸ்லிம்களுக்கு விரோதமாகவோ அல்லது வேறெந்த நோக்கத்துக்காகவோ இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. அப்பிரதேச எல்லைகளில் வாழும் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே இப்பிரகடனம் வெளியிடப்பட்டது. சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். அத்தவறுகள் திருத்திக்கொள்ளப்படும் என்றார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மன்னார் அரசாங்க அதிபர் வை.தேசப்பிரிய, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், பொருளாளர் மௌலவி கலீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், உபதலைவர் ஹில்மி அஹமட், செயலாளர் எஸ்.ஏ.அஸ்கர்கான், சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், வனபரிபாலன, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி, மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ‘முஸ்லிம்கள் இப்பிரச்சினையை அமைதியாகத் தீர்த்துக் கொள்வதற்கே எதிர்பார்க்கின்றனர்.
அதனால் 2012 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வன பிரகடன வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச் செய்ய வேண்டும். அப்பிரதேச மக்களின் காணிகளுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இதற்கென்று ஆணைக்குழுவொன்று நியமித்து மக்களின் கருத்துகளையும் பெற்று தீர்வுகள் வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விவகாரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் உரிய தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டும். இல்லையேல் நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் நாடு தழுவிய ரீதியில் பரந்த போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்;
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்;
‘யுத்தம் முற்றுப்பெற்று எட்டு வருடங்கள் கடந்து விட்டன. என்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை மீள் குடியேற்றாது இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவது தவறாகும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வர்த்தமானி அறிவித்தலை உடன் இரத்துச்செய்து சுயாதீன ஆணைக்குழு அமைத்து ஆராயப்பட வேண்டும்’ என்றார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளனர். இரண்டு வாரகாலத்துக்குள் தீர்வு கிடைக்காது விடின் நாடெங்கும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-Vidivelli-

