நாட்டின் முக்கிய விடயங்கள் குறித்த சட்டத்தை நான்கு பேர் கூடி தீர்மானிப்பதாக இருந்தால், சட்டவாக்க உயர்பீடமாகவுள்ள பாராளுமன்றம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்க முடியாது. பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம். இதற்கு மேலாக எதுவும் இருக்க முடியாது. நான்கு பேர் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தால் பாராளுமன்றம் எதற்கு எனவும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் தோல்வியடையுமாயின் அது நல்லிணக்கத்துக்கான தோல்வியாகவே அமையும். தடைகள் ஏற்படும்போது அரசாங்கம் புறமுதுகிட்டு ஓடாது மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று (06) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லையென ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். இதேவேளை, மகாநாயக்க தேரர்களுடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுமாயின் அது மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடனேயே இடம்பெறும் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment