(அஸீம் கிலாப்தீன்)
சிங்கள இளைஞன் ஒருவனைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை, முஸ்லிம் பாடசாலை இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டபோது தெரியவந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (27) இடம்பெற்ற அனுராதபுர ஸாஹிரா கல்லூரியின் பொன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
உங்களாலும், எங்களாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவல்கள் மாணவர்களினால் பரப்பப்பட்டிருந்தன. சிங்கள அமைப்பொன்றைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களை அமைத்திருந்தார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதுதான் இந்த உண்மை தெரியவந்தது.
அதேபோன்று கைது செய்யப்பட்ட சிங்கள மாணவர்களும் அமைப்பு ரீதியாக செயற்பட்டவர்கள் அல்லர். தான் பெற்றிருந்த தகவல் தொழில்நுட்ப அறிவை இனங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குழைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்ததையே காண முடிந்தது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்
பாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு பிரதம அதிதியாக ஜனாதிபதி மத்திரிபால சிறிசேன அவர்களும், சிறப்பு அதிதியாக அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, பீ. ஹரிசன், ஷந்தானி பண்டார, ரவூப் ஹக்கீம் வட மத்திய மாகாண முதலமைச்சர் எம்.பி. ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான் மற்றும் சந்திம கமகே அவர்களும் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment