மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி



-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சர்வதேச காணாமற்போனோர் தினத்தையொட்டி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி  மன்னாரில், இன்று (30) கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் பேரணியில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஆரம்பபமான குறித்த கவனயீர்ப்புப் பேரணி, மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக, மன்னார் மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
பின்னர் ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஜாவிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.