#திருக்கோவில் ’காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்க்கமான நீதியைத் தருக’




#கார்த்திகேசு
வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளக்கிய எட்டு மாவட்டங்களிலிருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்க்கமான நீதியை, சர்வதேசம் விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருக்கோவில் பிரதேசத்தில் பேரணியொன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில், இப்பேரணி இடம்பெற்றது.
“இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள காணாமற்போனோர் தொடர்பான விசாரணை அலுவலகம், சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடு; இந்த அலுவலகத்தினூடாக, எந்தவொரு நன்மையும் இல்லை; ஜனாதிபதியும் நல்லாட்சி அரசாங்கமும், எம்மைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர்” போன்ற வாசகங்களுடன், இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 39ஆவது கூட்டத் தொடரில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்க்கமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும், இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.