"கஷோக்ஜி கொலைக்கு உத்தரவிட்டது சௌதி இளவரசர் முகமது பின் சல்மான்":



பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பான ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டை சி ஐ ஏ செய்துள்ளதாகவும் அதன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற ஒரு சம்பவம், முகமத் பின் சல்மானின் அனுமதியுடன்தான் நடந்திருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நினைக்கின்றனர்.
கொலை தொடர்பாக பட்டத்து இளவரசர் சல்மானுக்கு ஏதும் தெரியாது என்று கூறும் சௌதி அரேபியா, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்ட கஷோக்ஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உயர் அதிகாரிகளிடம் இருந்தே கஷோக்ஜி கொலை உத்தரவு வந்துள்ளது என துருக்கி கூறுகிறது.