தேசியத்துக்கும், சர்வதேசத்துக்குமிடையேயான போராட்டமே நாட்டில் தற்போது



நாட்டில் இன்று இடம்பெறும் அரசியல் போராட்டமானது எனக்கும் ரணிலுக்குமான போராட்டம் அல்ல மாறாக அது தேசிய வாதத்துக்கும், சர்வதேச வாதத்துக்கும் இடையேயான போராட்டம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை நாட்டு மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

அத்துடன் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டுய நாட்டில் தனி நபரின் கீழான ஆட்சி இடம்பெற்றுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அவ்வாறான தனி நபர் ஆட்சி இந்த நாட்டுக்கு எப்போதும் அவசியம் அல்ல. கடந்த சில தினங்களாக பிரதமர் அமைச்சரவை இல்லாது முழுப் பொறுப்பையும் நான் மிகவும் பொறுப்புடன், பொறுமையுடன், சரியாகவும்  செய்து வருகின்றேன். 
ஆகவே இந்த நிலைமையை நீதிமன்றம் கருத்தில் கொண்டு நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்தவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் குறிப்பாக ஆண்டு இறுதியில் கொண்டுவரும் வரவு -செலவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் நீதிமன்றம் இவற்றை கருத்தில் கொண்டு விரைவாக ஒரு தீர்ப்பினை தருவார்கள் என நான் நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
இன்று காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.