மட்டக்களப்பில், இலஞ்சம் பெற்ற காவல் உத்தியோத்தர்கள் விளக்க மறியலில்



சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரிடம் இலஞ்சமாக 7 ஆயிரம் ரூபாவை பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு போக்குவரத்து பொலிஸாரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று (05) உத்தரவிட்டார். 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் வீதி போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள்களான இரு பொலிஸார் சம்பவதினமான வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வீதி போக்குவரத்து சோதனைச் சாவடியில் கடமையில் இருந்தபோது வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். 

இதன் போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதியாது விடுவிக்க 7 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கேட்டதையடுத்து குறித்த நபர் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கொடுத்த தகவலையடுத்து புலனாய்வு பிரிவு இலஞ்சமாக பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்திருந்தது. 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

(அம்பாறை நிருபர் சரவணன்)