கருமலையூற்று பள்ளிவாசல் உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்ட  கருமலையூற்று பள்ளிவாயல் காணப்படுகின்ற காணிகள்  உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் காணப்பட்ட பிரதேச காணிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் கருமலையூற்று பள்ளிவாசல் காணப்படுகின்ற காணிகள்  இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் காலங்களின் போது நல்லாட்சி அரசு கருமலையூற்று பள்ளி விவகாரம் தொடர்பில் கரிசனையுடன் செயற்படுமென சில அரசியல்வாதிகள் தெரிவித்திருந்த போதிலும் இன்னும் நல்லாட்சி அரசினால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கருமலையூற்று பள்ளிவாசல் காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை  எனவும் குறிப்பிடுகின்றனர் .

அதிகளவிலான பிரதேசங்களில் மக்கள் பாவனைக்காக பல காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தபோதிலும் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட கருமலையூற்று பள்ளிவாசல் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே காணப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் கடற்படைக்குச் சொந்தமான காணி எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி எனவும் கூறி பள்ளிவாயல் விடயத்தில் மாற்று திசைகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே கருமலையூற்று பள்ளி விவகாரம் தொடர்பில் நல்லாட்சி அரசும், திருகோணமலை மாவட்ட அரசியல் வாதிகளும் மிக கூடிய கவனம் எடுத்து வணக்கவழிபாடுகளை மேற்கொள்வதற்குரிய பள்ளிவாசல் காணிகளளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.