”மஹிந்தவோ, கோட்டாபயவோ சட்டப்படி ஜனாதிபதியாக முடியாது"


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் களமிறங்குவாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளா்.
சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டமைப்பாக எதிர்வரும் தேர்தலில் களமிறங்குமென்றும் அவர் கூறியுள்ளார்.
நாம் சட்டத்துக்கு கட்டுப்படும் பிரஜைகள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார். இதே சட்டம் தான் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் உள்ளது.
மீண்டும் நாட்டுத் தலைவரை தீர்மானிக்கும் போது நாட்டு மக்கள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.