கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு 2 இளைஞர்கள் உயிரிழப்பு


கிளிநொச்சியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து கிளிநொச்சி, அறிவியல் நகரில் நேற்றிரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
18 வயது மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மோதியே இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் ரயில் கடவையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோதே ரயிலுடன் மோதுண்டனர் என்று கூறப்படுகின்றது.
விபத்துத் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை அடுத்து ரயில் மீண்டும் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்குச் சென்று சடலங்களை ஒப்படைத்த பின்னர் பயணத்தைத் தொடர்ந்தது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக கிளிநொச்சியில் ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினர் எனப் பலர் பலியாகியுள்ளனர்.